அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Thursday 13 January 2011

பேரீத்தம்பழப் பச்சடி


இந்த பேரீத்தம்பழப் பச்சடி கீழத் தஞ்சை பகுதிகளின் ஊர்களில், குறிப்பாக நாகூர், நாகப்பட்டிணம், காரைக்கால், மயிலாடுதுறை போன்ற ஊர்களின் இஸ்லாமிய இல்லத் திருமணங்களில் பிரியாணி மற்றும் நெய்ச் சோறுடன் பக்க உணவாக வைப்பார்கள். ஊறுகாய்க்கு பதிலாக பயன்படுத்தப்படும் இந்த ப‌ச்சடிக்கு செல்லப் பெயர் 'தள்ளு வண்டி' :) சாப்பாட்டை உள்ளே தள்ளிக் கொண்டு போகும் என்பதால் அந்தப் பெயர்! :) வினிகருக்கு 'சுக்கா' என்ற பெயரும் உள்ளதால் வினிகர் சேர்த்து செய்யப்படும் இதற்கு 'சுக்கா பச்சடி' என்றும் சொல்வார்கள். அலாதியான சுவைக் கொண்ட இந்த பச்சடி சத்தானதும் கூட!





தேவையான பொருட்கள்:

பேரீத்தம் பழம் - 300 கிராம்
தக்காளி - பாதி
புளி பேஸ்ட் - 3 ஸ்பூன்
வினிகர் - 75 மில்லி
எலுமிச்சை ஜூஸ் - 3 ஸ்பூன்
எண்ணெய் - 75 மில்லி
சீனி - 5 ஸ்பூன்
உப்பு - சுமார் 3 ஸ்பூன்





பூண்டு - 7, 8 பற்கள்
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
முழு மிளகு -  ½ ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1½ ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 3 ஸ்பூன்
மசாலாத் தூள் - 1½ ஸ்பூன்
மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்




சற்று அகலமான ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகை வெடிக்கவிட்டு, கறிவேப்பிலையைக் கிள்ளிப் போடவும்.




இப்போது இஞ்சி பூண்டு பேஸ்ட்டைப் போட்டு, முறுக ஆரம்பிக்கும்போது அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய்த் தூள் போடவும்.




மிளகாய்த் தூள் தீய்ந்து விடாமல் தாளித்து, உடனே முழு மிளகு, நறுக்கி வைத்துள்ள பூண்டு பற்கள் மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.




பூண்டும் தக்காளியும் நன்கு வதங்கியவுடன், (விதை நீக்கி) மெலிதாக நறுக்கி வைத்துள்ள பேரீத்தம்பழத் துண்டுகளைக் கொட்டி, 2 நிமிஷங்கள் வதக்க‌வும்.


இப்போது மசாலாத் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, புளி பேஸ்ட்டை 1/2 கப் தண்ணீர் விட்டு கரைத்து ஊற்றவும்.




எல்லாம் ஒன்றாக சேர்ந்தவுடன் சீனி சேர்த்து, எலுமிச்சை சாறு மற்றும் வினிகர் ஊற்றவும்.




2, 3 நிமிடங்கள் கழித்து (சற்று வற்றி), ஊறுகாய் பதத்திற்கு வந்ததும் இறக்கவும்.




சுவையான பேரீத்தம்பழப் பச்சடி தயார்!

குறிப்பு:

- இந்தப் பச்சடியில் வினிகர் சேர்த்திருப்பதால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும். நன்கு ஆறியவுடன் காய்ந்த‌ ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து ஃபிரிஜ்ஜில் வைத்துக் கொள்ளலாம்.

- இதில் சேர்க்கப்பட்டுள்ள எலுமிச்சை சாறுக்கு பதிலாக துருவிய மாங்காய் 1/2 கப் சேர்க்கலாம். மாங்காய் கிடைக்காத பட்சத்தில் எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.  மாங்காய் துருவல் சேர்ப்பதாக இருந்தால், பேரீத்தம்பழத் துண்டுகளை சேர்க்கும்போதே அதையும் சேர்த்துவிட வேண்டும்.


27 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா அவர்களே..,
    நலமா?பார்க்கவே நாவில் எச்சில் ஊறும் அளவிற்க்கு உள்ளது பேரிச்சபழ பச்சடி.எனது விருப்பமான ஒன்று.
    நல்லா கலர்ஃபுல்லா செய்து இருக்கீங்க...
    வாழ்த்துக்கள்.

    அன்புடன்,அப்சரா.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    அஸ்மா ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன்... நேத்து கூட நினைச்சேன். உங்க காதுல விழுந்துடுச்சு போல

    செய்து அசத்திடுறேன்

    ReplyDelete
  3. வித்தியாசமாக இருக்கு அஸ்மா பேர்ரீத்தம் பழச்சட்னி.

    ReplyDelete
  4. @ அப்சரா...

    //அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா அவர்களே..,
    நலமா?பார்க்கவே நாவில் எச்சில் ஊறும் அளவிற்க்கு உள்ளது பேரிச்சபழ பச்சடி.எனது விருப்பமான ஒன்று.
    நல்லா கலர்ஃபுல்லா செய்து இருக்கீங்க...
    வாழ்த்துக்கள்//

    வ அலைக்குமுஸ்ஸலாம் அப்சரா! நல்லா இருக்கீங்களா? என் ப்ளாக் அட்ரஸ் கொடுக்கவே அறுசுவையில் உங்கள் மெயில் ஐடி கேட்டிருந்தேன். நீங்கள் கவனிக்கவில்லையென்று நினைக்கிறேன். இப்போது வருகை தந்தமைக்கு நன்றி, சந்தோஷம் :) உங்களுக்கும் இந்த பச்சடி ஃபேவரைட்தானா;)? கருத்துக்கு நன்றி அப்சரா!

    ReplyDelete
  5. @ ஆமினா...

    //அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    அஸ்மா ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன்... நேத்து கூட நினைச்சேன். உங்க காதுல விழுந்துடுச்சு போல

    செய்து அசத்திடுறேன்//

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... நீங்க கேட்டிருந்தீங்க என்பதால் உங்களுக்காகதான் ஆமினா ஃபோட்டோவுடன் செய்தேன். ஆனா 20 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் போனதால் உடனே போட முடியாமல் போய்விட்டது. இப்போதும் அந்த டயர்ட்னஸ் ரொம்ப இருக்கு. நீங்க கேட்டு நாளாச்சே என்பதால் எப்படியும் உங்களுக்காக போட்டுவிடணும் என்றுதான் போட்டேன் :) செய்து பார்த்து சொல்லுங்க ஆமினா.

    ReplyDelete
  6. @ ஸாதிகா...

    //வித்தியாசமாக இருக்கு அஸ்மா பேர்ரீத்தம் பழச்சட்னி//

    நீங்களும் செய்து பாருங்க! வருகைக்கு நன்றி, ஸாதிகா அக்கா.

    ReplyDelete
  7. பிரியாணியோடு இந்த பச்சடி நல்ல காம்பினேஷன் தான் அஸ்மா... புளிப்பும் இனிப்புமா நல்லா இருக்கும் போல... நல்ல பதிவு.

    ReplyDelete
  8. @ enrenrum16...

    //பிரியாணியோடு இந்த பச்சடி நல்ல காம்பினேஷன் தான் அஸ்மா... புளிப்பும் இனிப்புமா நல்லா இருக்கும் போல...//

    ஆமாப்பா.. இனிப்பு, புளிப்பு, லேசான காரம், வினிகரின் டேஸ்ட் எல்லாம் கலந்து அருமை இருக்கும். நன்றி பானு, செய்து பாருங்க!

    ReplyDelete
  9. அஸ்மா.. ரொம்ப நல்லா செய்திருக்கீங்க பேரீத்த பழச்சடனி.. பார்க்கும்போது ரொம்ப நல்லாருக்கு..

    ரொம்ப நாளா எழுதவில்லையே..

    உங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. ///ஆனா 20 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் போனதால்///

    இப்ப எப்படி இருக்கு உடல்நிலை.. உடம்பை கவனித்துக் கொள்ளவும்.

    அன்புடன்

    ஸ்டார்ஜன் நானா.

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்}

    தோழி அஸ்மா எப்படி இருக்கீங்க. ப்ளாக் பக்கம்

    வந்து ரெம்ப நாளாச்சு.பதிவை பார்த்து சந்தோஷம்.

    உடம்பை கவனித்து கொள்ளவும்.


    பேர்ரீத்தம் பழச்சட்னி வித்தியாசமாக இருக்கு தோழி.

    ReplyDelete
  12. @ Starjan ( ஸ்டார்ஜன் )...

    //அஸ்மா.. ரொம்ப நல்லா செய்திருக்கீங்க பேரீத்த பழச்சடனி.. பார்க்கும்போது ரொம்ப நல்லாருக்கு..//

    நன்றி ஸ்டார்ஜன் நானா.

    //உங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்//

    பொங்கல் வாழ்த்துக்களா..? சொல்கிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம் நானா. ஒரே இறைவனை மட்டும் வணங்க வேண்டிய நமக்கு, சூரியனை கடவுளாக வழிபடும் பொங்கல் கொண்டாட்டத்தில் உடன்பாடில்லை. எந்த மத அடிப்படையும் கலக்காமல் தமிழ்க் கலாச்சாரத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கொண்டாடினால் நாமும் தமிழர்கள் என்ற அடிப்படையில் சந்தோஷமாக‌ கொண்டாடுவோம். இதைப் பற்றி முடிந்தால் ஒரு பதிவுடுகிறேன், இன்ஷா அல்லாஹ்! அதுவரை உங்களின் கருத்து இருந்தாலும் சொல்லுங்கள். மற்றபடி தவறாக நினைக்க வேண்டாம்.

    //இப்ப எப்படி இருக்கு உடல்நிலை.. உடம்பை கவனித்துக் கொள்ளவும்//

    அல்ஹம்துலில்லாஹ், 75% பரவாயில்லை நானா. அதான் ரொம்ப நாளா எழுதவில்லை. தங்களின் விசாரிப்புக்கு நன்றி நானா :)

    ReplyDelete
  13. @ ஆயிஷா...

    //அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்}

    தோழி அஸ்மா எப்படி இருக்கீங்க. ப்ளாக் பக்கம்

    வந்து ரெம்ப நாளாச்சு.பதிவை பார்த்து சந்தோஷம்.

    உடம்பை கவனித்து கொள்ளவும்//

    அல்ஹம்துலில்லாஹ், உங்களைப் போன்றவர்களின் துஆவினால் இப்போது ஓரளவு பரவாயில்லை ஆயிஷா!


    //பேர்ரீத்தம் பழச்சட்னி வித்தியாசமாக இருக்கு தோழி//

    நன்றி தோழி. இப்போது இன்னொரு புது ப்ளாக் தொடங்கியிருக்கீங்களா? வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. ஸலாம் சகோ அஸ்மா,

    ரொம்ப நாள் கழித்து பதிவு,சுவையான பதிவு.
    நான் ராமநாதபுரம் சைடு..இத இப்பத்தா கேள்விப்படுறேன்..நல்லாவே செய்து இருக்கீங்க..
    முழுவதும் புளிப்பும் இனிப்புமான பக்க உணவு...இல்ல இல்ல பக்கா உணவு..

    கலர் ஃபுல்

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  15. @ RAZIN ABDUL RAHMAN...

    //ஸலாம் சகோ அஸ்மா,

    ரொம்ப நாள் கழித்து பதிவு,சுவையான பதிவு.
    நான் ராமநாதபுரம் சைடு..இத இப்பத்தா கேள்விப்படுறேன்..நல்லாவே செய்து இருக்கீங்க..//

    ஸலாம் சகோ. இப்பதான் கேள்விப்படுறீங்களா..? ஆமா உங்க ஊர் பக்கம் இது இல்லாததால் சான்ஸ் இல்லதான்.

    //முழுவதும் புளிப்பும் இனிப்புமான பக்க உணவு...இல்ல இல்ல பக்கா உணவு..//

    :)) நன்றி சகோ.

    ReplyDelete
  16. ஸலாமுன் அலைக்கும் சகோ.அஸ்மா,

    அல்ஹம்துலில்லாஹ்...
    உடல்தேறி வந்தது கண்டு மகிழ்ச்சி.

    உங்கள் 'தள்ளு வண்டி' தயாரிப்பு முறை-அருமை. இந்த 'புளிப்பு இனிப்பு கூட்டணி'தான் இப்போது தஞ்சை ஜில்லா முழுக்க முன்னணி தெரியுமா?

    தற்போது, கத்தரிக்காய் பச்சடியிலும் பேரித்தம்பழம் போட்டு... புளிப்பும் இனிப்புமாய்... 'தள்ளுவண்டி' டாப் கியரில் எகிறுகிறது... சகோ..! ஏனங்குடி பண்டாரிக்கு ஜே..! பாவம்.. பிரியாணி பத்தாமபோய் அவசரத்துக்கு வெருஞ்சோறு ஆக்கும் நிலைமை.

    இப்ப நீங்க இதையும் (தக்காளி பச்சடிக்கு ஒரு நல்ல மாற்று) கத்து தற்றீங்களா... போச்சு.(ஊருக்கு போனால் ஒரு விருந்தையும் விட மாட்டோம்ல..!)

    ReplyDelete
  17. @ முஹம்மத் ஆஷிக்...

    //ஸலாமுன் அலைக்கும் சகோ.அஸ்மா,

    அல்ஹம்துலில்லாஹ்...
    உடல்தேறி வந்தது கண்டு மகிழ்ச்சி//

    அல்ஹம்துலில்லாஹ், மிக்க நன்றி சகோ.

    //உங்கள் 'தள்ளு வண்டி' தயாரிப்பு முறை-அருமை. இந்த 'புளிப்பு இனிப்பு கூட்டணி'தான் இப்போது தஞ்சை ஜில்லா முழுக்க முன்னணி தெரியுமா?//

    அப்படியா..? :))

    //தற்போது, கத்தரிக்காய் பச்சடியிலும் பேரித்தம்பழம் போட்டு... புளிப்பும் இனிப்புமாய்... 'தள்ளுவண்டி' டாப் கியரில் எகிறுகிறது... சகோ..! ஏனங்குடி பண்டாரிக்கு ஜே..! பாவம்.. பிரியாணி பத்தாமபோய் அவசரத்துக்கு வெருஞ்சோறு ஆக்கும் நிலைமை//

    கண்டிப்பா இந்தப் பச்சடியும், (நெய் சோறாக இருந்தால்) தாளிச்சாவும் சேர்ந்தால் அவச‌ர சோறுதான் ஆக்கணும் :)) ஏனங்குடி பண்டாரியின் கத்தரிக்காய், பேரீத்தம்பழம் கூட்டும் நல்லாதான் இருக்கு!

    //இப்ப நீங்க இதையும் (தக்காளி பச்சடிக்கு ஒரு நல்ல மாற்று) கத்து தற்றீங்களா... போச்சு.(ஊருக்கு போனால் ஒரு விருந்தையும் விட மாட்டோம்ல..!)//

    தக்காளி ப‌ச்சடிக்கு இது மாற்று அல்ல சகோ. வெங்காயப் பச்சடிக்குதான் மாற்று! ஏன்னா அதிலும் புளிப்பு இருக்குமல்லவா, அதனால் தேவைப்படாது. கருத்திற்கு நன்றி சகோ.

    ReplyDelete
  18. நம்ம ஊர் பச்சடி களைகட்டுதே, செய்முறை அருமை.

    ReplyDelete
  19. @ இளம் தூயவன்...

    //நம்ம ஊர் பச்சடி களைகட்டுதே, செய்முறை அருமை//

    :)) நன்றி நானா!

    ReplyDelete
  20. அஸ்ஸலாமு அலைக்கும் தோழி.
    ஆகா நம்மபக்க வாசனை தூக்குதே.போட்டோக்கள் பளிச் பளிச் சூப்பர்

    உடல்நலம் நன்றாக ஆனதற்க்கு அல்ஹம்துல்லிஹ்.

    ReplyDelete
  21. @ அன்புடன் மலிக்கா...

    //அஸ்ஸலாமு அலைக்கும் தோழி.
    ஆகா நம்மபக்க வாசனை தூக்குதே.போட்டோக்கள் பளிச் பளிச் சூப்பர்//

    வ அலைக்குமுஸ்ஸலாம் தோழி! களரி நினைப்பு வந்துவிட்டதா?:)) ஃபோட்டோவும் நல்லா இருக்கா..? சந்தோஷம் :)கருத்திற்கும் வருகைக்கும் நன்றிமா!

    //உடல்நலம் நன்றாக ஆனதற்க்கு அல்ஹம்துல்லிஹ்//

    மிக்க நன்றி மலிக்கா!

    ReplyDelete
  22. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    சகோதரி.அஸ்மா அவர்களுக்கு
    உங்களுடைய ப்ளாக்கிற்கு வந்து பத்து பதினைந்து நாட்கள் இருக்கும் இன்னைக்கி தான் வந்து பார்த்தேன்

    வந்து பாத்தா
    ./// ஆனா 20 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் போனதால் உடனே போட முடியாமல் போய்விட்டது. இப்போதும் அந்த டயர்ட்னஸ் ரொம்ப இருக்கு//

    என்ற உங்களின் பின்னூட்டத்தை படித்து வருத்தமடைந்தேன் உங்களுக்காக துஆ செய்கிறேன்
    (அல்லாஹ் போதுமானவன்)
    உடல் வலி இன்னும் சரியாகாத நிலையில் ஏன் பதிவு போட வேண்டும் இது அவ்வளவு முக்கியமா?
    சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்

    முதலில் உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள்

    சகோதரன்
    ஹைதர் அலி

    ReplyDelete
  23. @ ஹைதர் அலி...

    //அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    சகோதரி.அஸ்மா அவர்களுக்கு
    உங்களுடைய ப்ளாக்கிற்கு வந்து பத்து பதினைந்து நாட்கள் இருக்கும் இன்னைக்கி தான் வந்து பார்த்தேன்

    வந்து பாத்தா
    ./// ஆனா 20 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் போனதால் உடனே போட முடியாமல் போய்விட்டது. இப்போதும் அந்த டயர்ட்னஸ் ரொம்ப இருக்கு//

    என்ற உங்களின் பின்னூட்டத்தை படித்து வருத்தமடைந்தேன் உங்களுக்காக துஆ செய்கிறேன்
    (அல்லாஹ் போதுமானவன்)//

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... தங்களின் துஆவுக்கும் சகோதரப் பாசத்திற்கும் மிக்க நன்றி, சந்தோஷம் சகோ :)

    //உடல் வலி இன்னும் சரியாகாத நிலையில் ஏன் பதிவு போட வேண்டும் இது அவ்வளவு முக்கியமா? //

    ஏற்கனவே ரெடி பண்ணி வைத்திருந்ததை சரி பார்த்து போட்டதால் கொஞ்சம் வேலை ஈசியாக இருந்தது சகோ. உடல்நிலையை கவனிப்பதை விட இது முக்கியமல்ல என்பதால்தான் கிட்டத்தட்ட 2 வாரங்கள் இந்தப் பக்கமே எட்டிப் பார்க்காமல் இருந்தேன் :) வருவதற்கு நினைவும் இருக்காது, நினைத்தாலும் முடிந்திருக்காது. அப்படியொரு நிலமை! அல்லாஹ் உதவியால் ஓரளவு எழுந்து உட்கார முடிந்த பிறகு இணைய சொந்தங்களைப் பார்க்கவேண்டும் என்று வந்தேன் :)

    //சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். முதலில் உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள்//

    இது அப்படியே என் வாப்பா சொல்வதுபோல் உள்ளது சகோ :) படிக்கும் காலத்தில் ஒரே படிப்பு படிப்பு என்று சாப்பாடு, தூக்கம், ஓய்வு எதையும் கவனிப்பதே இல்லை. அப்போது வாப்பா இப்படி சொல்லும்போது, 'நான் வரைவது சுவரில்லா சித்திரம் வாப்பா' என்று சொல்வேன் :) அந்த ஞாபகம் வந்துவிட்டது. தங்களின் அக்கறையான வார்த்தைகளுக்கு மீண்டும் எனது நன்றிகள்.

    ReplyDelete
  24. நிச்சயம் செய்து பார்க்க வேண்டும்.அருமை.

    ReplyDelete
  25. @ asiya omar...

    //நிச்சயம் செய்து பார்க்க வேண்டும்.அருமை//

    செய்து பார்த்து சொல்லுங்க ஆசியாக்கா. தங்களின் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  26. assalamu alaikkum intha pachadikku manga konjam podanum athu pottathan suvai kooduthala irukkum

    ReplyDelete
    Replies
    1. @ Anonymous

      //assalamu alaikkum intha pachadikku manga konjam podanum athu pottathan suvai kooduthala irukkum//

      வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

      மாங்காய் சேர்த்தால் சுவை கூடும் எனத் தெரிந்துதான் கடைசியாக குறிப்பில் கூடுதல் தகவல் சேர்க்கப்பட்டுள்ளது. நீங்கள் கவனிக்கவில்லையென நினைக்கிறேன். அந்த குறிப்பினைப் பாருங்கள்:

      //இதில் சேர்க்கப்பட்டுள்ள எலுமிச்சை சாறுக்கு பதிலாக துருவிய மாங்காய் 1/2 கப் சேர்க்கலாம். மாங்காய் கிடைக்காத பட்சத்தில் எலுமிச்சை சாறு சேர்க்கலாம். மாங்காய் துருவல் சேர்ப்பதாக இருந்தால், பேரீத்தம்பழத் துண்டுகளை சேர்க்கும்போதே அதையும் சேர்த்துவிட வேண்டும்//

      மாங்காய் கிடைக்காத பட்சத்தில்தான் எலுமிச்சை சாறு சேர்க்கலாம் என்று கூறியிருந்தேன். மந்திரத்தில் மாங்காய் காய்க்காதல்லவா? :) நீங்கள் வசிப்பது ஃபிரான்ஸ் நாட்டில் என நினைக்கிறேன். உங்களுக்கு எல்லா நேரங்களிலும் மாங்காய் கிடைக்காது. இதை பலமுறை நான் செய்யும்போதும் எனக்குக் கிடைப்பதில்லை. அதனால்தான் அதற்கு மாற்றாக‌ எல்லா நேரங்களிலும் கிடைக்கும் இந்த எலுமிச்சை சாறு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது அனானி. அடுத்தமுறை உங்கள் பெயரையும் சேர்த்துக் கொடுங்கள். உங்கள் வசதிக்காக இதுபற்றிய‌ இன்னும் கூடுதல் தகவல்கள் உங்களுக்கு சொல்கிறேன் :)

      Delete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை